Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

தமிழக தேர்தலும் அரசியல்வாதிகளும்

கருப்பொருள் ஈழம்


தமிழீழத்தில் 22 ஆண்டுகளாக தமீழீழ தமிழர்கள் கொடுமை படுத்தப்பட்டு வருகிறார்கள். என்றுமில்லாத எங்குமில்லாத ஒரு மனித பேரழிவு இன்று இலங்கையில் இந்திய இலங்கை கூட்டு முயற்சியால் நடந்து வருகிறது. அந்த கூட்டு முயற்சிக்கு தமிழக தமிழர்களின் பங்கு எந்தளவு உள்ளது என்பதை அறியவே தற்போது தேர்தல் எனும் மேடை அரங்கேறியுள்ளது. நிச்சயமாக அதில் பங்குபெறும் கதாநாயகர்கள் இலங்கை தமிழர்களின் துயர்கண்டு குரல் கொடுத்தார்களா? அல்லது தேர்தல் களம் கண்டு குரல் கொடுத்தார்களா?

ஏன் இந்த சந்தேகம் எழுந்தது என்றால், தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கட்சிகளும் கட்சி தலைவர்களும் இப்போ எங்குள்ளார்கள் என்று கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாக உள்ள படியால் தான். ஏனெனில், தமிழ் மக்கள் துன்பப்படுகிறார்கள், சாகடிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழக அரசோ குரல் கொடுக்காமல் இருக்கிறது என்று குரல் கொடுத்த கட்சிகளும் கட்சி தலைவர்களும் ஏன் இப்போது குரல் கொடுக்கவில்லை. தமிழீழ மக்களுக்கு தமிழீழம் மலர்ந்து விட்டதா? அல்லது தமிழீழ மக்கள் மீது பாயும் எறிகணைகள் தான் ஓய்ந்து விட்டனவா? அல்லது இந்தியரசு கொடுக்கும் ஆதரவு தான் குறைந்து விட்டதா? இன்னும் மேலோங்கி தமிழர்களிற்கு எதிரான போரில் இறந்த 200 இந்திய இராணுவத்தின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது ஏன் மௌனம்? தேர்தல் கூட்டணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாலா? தமிழகத்தில் போராட்டம் நடத்தவேண்டும் அதனால் தமிழகமே ஸ்தம்பிக்கவேண்டும். அதன்மூலம் மத்தியரசுக்கு உணர்த்தி இலங்கையில் போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என குரல் கொடுத்துவந்த ஐயா மருத்துவர் அவர்கள் தற்போது தமிழீழத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பிடித்து இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த அம்மையாருடன் கூட்டணி அமைத்திருக்கிறார் என்றால் அவரின் எண்ணம் சிந்தனைகள் முற்றுமுழுதாக ஈழத்தின் பக்கமா? தேர்தலின் பக்கமா?

இன்று வரை தமிழீழத்தில் மக்கள் மடிந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் முன்பு எப்போதும் காணப்பட்ட அளவுக்கு தற்போது எந்த போராட்டங்களையுமோ, குரல்களையுமோ காணவில்லையே என்ன காரணம்? இதை விட பெரிய விடயம் என்ன என்றால், ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. இதுவரை இந்தியாவில் தமிழீழ அவலங்களை எந்த ஊடகங்களுமே காட்டியதில்லை மக்கள் தொலைக்காட்சியை தவிர. மக்கள் தொலைக்காட்சி செய்தி என்றாலே முதல் செய்தியே இலங்கை செய்தி என்பது எல்லோரும் அறிந்த விடயமாக இருந்தது. ஆனால், இன்று சிலவேளைகளில் இலங்கை செய்தியே இருக்காது இருந்தால் தேர்தல் செய்திகளிற்கு பின்னர் தான் இலங்கை செய்தி சொல்கிறார்கள். இதிலிருந்து தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது தேர்தலுக்கும் ஈழத்துக்குமான முக்கியத்துவம்.

தங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்காக ஈழப்பிரச்சனையை ஒரு பகடக்காயாக பயன்படுத்தியிருக்கிறார்கள். தேர்தல் இலாபத்துக்காக பதவிக்காக ஈழத்தை ஒரு மையமாக்கியிருக்கிறார்களே தவிர தமிழீழம் அமைவதோ அமையாது விடுமோ அல்லது மக்கள் துன்பப்படுகிறார்களே என்ற ஒரு எண்ணம் மனச்சாட்சி உள்ளவர்களுக்கு சிறிதளவு இருந்திருந்தாலும் முற்று முழுதாக அது தான் காரணம் இல்லை என்பதே தமிழக அரசியலில் நிஜம். தேர்தலிற்காக தம்மை அனைத்து அரசியல்வாதிகளும் அறிமுகப்படுத்திவிட்டார்கள். இனி ஈழம் பற்றி அவர்களுக்கு எதுவித சிந்தனையும் இருக்காது. எப்போ நாற்காலி கிடைக்கும் உட்காரலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையிலேயே இருப்பார்கள். எனவே, அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது. போலிப் பேச்சுக்கு தலைசாயாமல் சிந்தித்து செயற்படுங்கள்.

குறிச்சொற்கள்:
கைதுறப்பு