இந்தியரசு என்னதான் ஈழமக்களுக்கு ஆதரவு செய்கிறோம் என்று வெளிநாடகம் ஆடினாலும் தமிழ் மக்களை அழிவுக்கு அடிகோலாக இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அதை ஏற்காத தமிழ் மக்களுக்கு இன்று வெளியாகியிருக்கும் செய்தி பாடம் புகட்டியிருக்கும் என நம்புகிறேன். தமிழ் மக்களின் ஆதரவோடு பாராளுமன்றம் சென்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவர்களை 72 மணித்தியாலங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லி மத்தியரசு உத்தரவு இட்டிருக்கிறது.
தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்மக்களான தன் உறவுகள் இருக்கும் நட்புறவு நாட்டுக்கு வந்து தங்களின் உறவுகளின் துயரினை கூறுவது தவறா? உறவுகள் படும் துன்பத்தை கண்ணூடாக பார்த்துவிட்டு வந்து அந்த உண்மையை சொல்வது தவறா? இதில் மத்தியரசாங்கத்துக்கு என்ன இருக்கிறது? இலை மறை காயாக இலங்கை அரசாங்கத்துக்கு செய்து வரும் ஆயுத உதவிகள் இந்திய உறவுகளுக்கு தெரியப்படுத்தி விடுவார் என்பதற்காகவா?
தமிழர்களுக்கு அட்டூழியம் செய்து வருபவர்களின் இனம் சார்ந்தவர்கள் வந்து ஆயுதம் வாங்கி கொண்டு போகும் போது மட்டும் நாட்டைவிட்டு வெளியேறச்சொல்லவில்லை ஏன்?.. மத்தியரசுக்கு துணைபோகும் தமிழர்களே! தன்மானத்துடன் சிந்தியுங்கள். உங்கள் இனத்தை அழிப்பதற்காக வருபவன் விருந்தாளி. உங்கள் இனத்திற்கு ஆதரவாக ஆதரவுக்குரல் கொடுக்க வருபவன் பகையாளியா?
ஈழத்து உறவுகள் துன்பபடுகிறார்கள் என்று பணம், அத்தியவசிய பொருட்கள் எல்லாம் கொடுத்து உதவுவது என்பது தமிழர்களின் ஒரு நாள் இன்பத்துக்கான வழியே தவிர தமிழர்களின் நிரந்தரமான இன்பத்துக்கான, தாகத்துக்கான வழி அது கிடையாது. முகர்சியை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்து விட்டீர்கள். ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், முகர்சி இலங்கைக்கு வருகிறார் என்றவுடனேயே இலங்கை அரசாங்கம் சொல்லிய பதில் "இந்தியா யுத்ததை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்காது" என்று .
இந்தியாவின் மத்தியரசாங்கத்துக்கும் இலங்கையின் கொடூர ஆட்சியாளருக்கும் இடையில் எப்படியான உறவு காணப்படுகிறது? என்பதை உலகம் உணரவேண்டும். உங்கள் ஆயுதம் விலைப்படுத்தப்படவேண்டும். உங்கள் நாடு வளரவேண்டும் என்பதற்காக எம் இனம் அழியவேண்டுமா? இன்று தெட்டத் தெளிவாக மக்கள் உணர்ந்த ஒருவிடயம் உணரவேண்டிய ஒருவிடயம் மத்தியரசாங்கம் மஹிந்த அரசுக்கு துணைபோகிறது ஆதரிக்கிறது. அதேநேரம் எம் உறவுகளான தமிழினத்தை புறக்கணிக்கிறது அழிக்கிறது.
இந்த உண்மையை தமிழ் மக்களும் மத்தியரசுக்கு துணைபோகும் தமிழ்கட்சிகளும் மிகவும் நுணுக்கமாகவும் கவனமாகவும் பரிசீலிக்க வேண்டும்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்